பாடசாலை செல்லும்போது மாவட்டங்களுக்கும் மாகாணங்களுக்கும் இடையே போக்குவரத்தை குறைப்பதற்கு இயன்றளவு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து சாதாரண தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி தாம் கல்வி கற்கும் பாடசாலை கொழும்பு மாவட்டத்தில் அமைந்திருந்தாலும் அருகில் உள்ள பாடசாலைகளுக்குச் சென்று தற்காலிகமாக தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவிக்கையில் அருகில் உள்ள பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான அனுமதியை வழங்குவதற்கு தயாராக உள்ளோம்.அத்துடன் ஆசிரியர்களும் மாகாணங்களுக்கு இடையே போக்குவரத்தை மேற்கொள்ளாது அருகிலுள்ள பாடசாலைகளுக்குச் சென்று கற்பிப்பதற்கு அனுமதி வழங்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் பாடசாலைகளை திறப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் மிகவும் கடினமான ஒன்றாகும் எனவே அதன் வெற்றியை தக்கவைத்துக் கொள்ள அனைவரினதும் ஆதரவு தேவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் இம்முறை பாடசாலை மாணவர்களின் போக்குவரத்தில் அதிக கவனம் செலுத்த பட்டிருப்பதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்காக மேல் மாகாண பாடசாலைகள் மூன்று மாதத்திற்கு மேற்பட்ட காலத்தின் பின்னர் நேற்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.இதன்படி மேல் மாகாணத்தில் 907 பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளதுடன் 73,319 மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகளை தொடர சந்தர்ப்பம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.