பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை ஜனவரி 7ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் நலன்புரி திட்டங்கள்,கூட்டு ஒப்பந்தத்தில் திருத்தம் தொடர்பில் இடம்பெற்றிருந்த பேச்சுவார்த்தை இன்று(31) வரை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் கண்டியில் கடந்த 17ஆம் திகதியன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த அக்கரபத்தனை பிரதேச சபைத் தவிசாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்த நிகழ்வில் கலந்து கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இவர்களுக்கான பிசிஆர் பரிசோதனை மேற்கொண்ட போது ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட சிலரது அறிக்கைகள் வெளியானதுடன் மேலும் சிலரின் பிசிஆர்அறிக்கைகள் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் வியாழக்கிழமை(31) இடம்பெறவிருந்த சம்பள பேச்சுவார்த்தையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறி கலந்துகொள்ள மாட்டோம் என தெரிவித்து பேச்சுவார்த்தையில் இருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் விலகியிருந்தது.
இதையடுத்து பேச்சுவார்த்தையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கலந்துகொள்வது கேள்விக்குறியாக இருந்து வந்த நிலையில் குறித்த பேச்சுவார்த்தை ஜனவரி 7ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.