ஹட்டன் - டிக்கோயா நகர சபைக்குட்பட்ட ஹட்டன் நகரில் அமைந்துள்ள மூன்று கடைகள் கொரோனா அச்சத்தால் நேற்று(19) மாலை மூடப்பட்டன.
வட்டவளை ஆடைத் தொழிற்சாலையில் நபர்களிடம் எழுமாறாக மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையின்போது குறித்த தொழிற்சாலையில் ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த நபர் ஹட்டன் நகரில் இரண்டு புடவை கடைகளுக்கும் ஒரு செருப்பு விற்பனை நிலையத்திற்கும் சென்றுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத் து குறித்த கடைகள் ஹட்டன் டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர்களால் மூடப்பட்டது.அதில் கடமை புரிந்த 33 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதில் ஒரு புடவை கடையில் சுகாதார அறிவுறுத்தல்கள் பின்பற்றாததன் காரணமாக வழக்குத் தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த நபர் ஹட்டன் நகரில் உள்ள இலங்கை வங்கிக்கும் சென்றுள்ளார். எனினும் குறித்த வங்கியில் முறையாக சுகாதார வழிமுறைகளை பின்பற்றியதன் காரணமாக அவருடன் தொடர்பு கொண்ட இரண்டு ஊழியர்கள் மாத்திரம் சிசிடிவி கமராவின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.