ஹட்டன் பகுதியில் கொரோனா வைரஸ் அபாயம் இருப்பதால் இப்பகுதியில் இயங்கி வரும் தனியார் பஸ்களில் இருக்கைகளுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றும் பஸ்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நகரசபை சுகாதார பிரிவுக்கு, ஹட்டன்- டிக்கோயா மேயர் எஸ்.ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும்,ஹட்டனை சுற்றியுள்ள பகுதிகளில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களில் அதிக அளவு பயணிகளை ஏற்றி செல்வதாகவும், இதனால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனரென தெரிவிக்கப்படுகின்றது.
இருக்கைகளின் அளவுக்கு ஏற்ப மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்லுமாறு அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும்,இதை தனியார் பஸ் உரிமையாளர்களும் நடத்துநர்களும் கவனத்தில் கொள்வதில்லை என்றும் தனியார் பஸ்களில் நெரிசலாகவே பயணிகளை ஏற்றி செல்வதாகவும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அவ்வாறு சட்டத்தை மீறி செயல்படும் பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.