போலியான தகவல்களை வழங்கும் கொரோனா நோயாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பிசிஆர் பரிசோதனைகளின் போதிலும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் போதிலும் பலர் போலியான தகவல்களை வழங்கியுள்ளமை கடந்த காலங்களில் பதிவாகியுள்ளன.
இந்த நடவடிக்கை தொடர்பில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மாஅதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
போலியான விலாசங்கள் மற்றும் போலியான பெயர்கள் வழங்கப்படுமாயின் ஆள்மாறாட்ட குற்றச்சாட்டு முன்வக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதன் காரணமாக தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு அமைய அவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது வழக்குத் தாக்கல் செய்வதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றவாளியாக அடையாளம் காணப்படுவோருக்கு 5 வருட சிறை தண்டனை வழங்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.