இலங்கையில் நேற்றைய தினம் மேலும் 2 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு 2 பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவர் மற்றும் கொழும்பு 8 பிரதேசத்தைச் சேர்ந்த 96 வயது உடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த 109 பேரில் மூவர் 10 வயதிற்கும் 30 வயதிற்கும் உட்பட்டவர்கள் என்பதுடன் நால்வர் 31 வயதிற்கும் 40 வயதிற்கும் உட்பட்டவர்கள்.
மேலும் 41 வயதிற்கும் 50 வயதுக்கும் உட்பட்ட 16 பேர், 51 வயதிற்கும் 60 வயதிற்கும் உட்பட்ட 21 பேர் மற்றும் 65 வயதுக்கும் 70 வயதிற்கு உட்பட்ட 20 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் 71 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிக அளவில் உயிரிழந்துள்ளதுடன் அந்த எண்ணிக்கை 45 ஆக தெரிவிக்கப்படுகின்றது.
மொத்த மரணங்களில் 81 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் 13 பேர் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
களுத்துறையில் 6 பேர், குருணாகலையில் 4 பேர், புத்தளத்தில் 3 பேர், நுவரெலியாவில் ஒருவர் மற்றும் இனங்காணப்படாத ஒருவரது மரணமும் அவற்றுள் அடங்குகின்றது.
109 மரணங்களில் 44 பேர் வீடுகளில் அல்லது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் உயிரிழந்துள்ளதுடன்,64 பேர் வைத்தியசாலைகளில் வைத்து உயிரிழந்துள்ளனர்.
ஒருவர் வீதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.