நாட்டில் இன்றைய தினம்(22) மேலும் 50 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 6,000 ஆக உயர்வடைந்துள்ளது.
மினுவாங்கொடை கொவிட் கொத்தணியில் இதுவரை 2558 பேரர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாட்டில் இதுவரை 6028 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 2454 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்றுவரை 3561 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டார்.அவர் சீனாவின் துபே பகுதியில் இருந்து நாட்டுக்கு வருகை தந்த சீன பெண் ஒருவர் ஆவார்.
கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர் கடந்த மார்ச் 11ஆம் திகதி அடையாளம் காணப்பட்டார்.அவர் ஒரு சுற்றுலா வழிகாட்டியாவார். மே மாதம் 19ம் திகதி வரை ஆயிரம் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் ஜூன் மாதம் 24ம் திகதியாகும் போது அந்த எண்ணிக்கை 2000 ஆக அதிகரித்தது.
ஓகஸ்ட் 30ஆம் திகதியாகும் போது 3000 ஆக காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒக்டோபர் 6ஆம் திகதியாகும்போது 4000 ஆக உயர்வடைந்தது.
ஒக்டோபர் 13 ஆம் திகதி ஆகும்போது தொற்றாளர்களின் எண்ணிக்கை 5000 ஆக அதிகரித்தது.இந்த நிலையில் கடந்த ஒன்பது நாட்களில் ஆயிரம் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமை விசேட அம்சமாகும். இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை பேலியகொட மீன் விற்பனை மத்திய நிலையத்தில் எண்ணூறு பேர் வரையில் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டவுடன் அவர்களுடன் நெருங்கி பழகியவர்கள் இவ்வாறு உடனடியாக தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
அதன்படி 863 பேர் தியத்தலாவை குண்டசாலை முல்லைத்தீவு மட்டக்களப்பு பலாலி மற்றும் பெரிய காடு ஆகிய இடங்களில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்