தொழில் வாய்ப்பின்றி காணப்படும் வேலையற்ற பட்டதாரிகள் மேலும் 10 ஆயிரம் பேருக்கு தொழில் வாயப்பினை பெற்றுக்கொடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மேலும் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவின் பணிப்புரைக்கு அமைய குறைந்த வருமானம் பெறும் ஒரு இலட்சம் பேருக்கும் தொழில்வாய்ப்பு இன்றி காணப்படும் 50,000 பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும் குறித்த திட்டத்திற்கு அமைய 50,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கான தொழில் வாய்ப்பு பெற்றவர்களின் பெயர் விபரங்கள் அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தன. இந்த நிலையில் தொழில் வாய்ப்பு கிடைக்கப்பெறாத ஏனைய பட்டதாரிகள் இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மேலும் புதிய அரசாங்கத்தின் கன்னி அமைச்சரவை கூட்டம் இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதோடு, நிறைவடைந்து ஜனாதிபதி வெளியேறிய சந்தர்ப்பத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது பட்டதாரிகள் தங்களது முறைப்பாடுகளை ஜனாதிபதியிடம் தெரிவித்தபோது அதனை செவி மடுத்த ஜனாதிபதி, அனைவருக்கும் தொழில்வாய்ப்பு கிடைக்கப்பெறுமென தெரிவித்தார். அத்துடன் மேலும் 10,000 பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பினை வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.