கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட 13,861 வியாபாரங்களுக்கென 28 பில்லியன் ரூபா தொகையுடைய கடன்களை 4% இல் வழங்குவதற்கு மத்திய வங்கி ஒப்புதலளித்துள்ளது.
கொரோனா நோய்த்தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கு புத்துயிரளிக்கும் அவசிய தேவையினையும் அதனூடாக நாட்டில் பொருளாதார நடவடிக்கையினை ஊக்குவிப்பதையும் இனங்கண்டு மத்திய வங்கியும் இலங்கை அரசாங்கமும் 2020 மார்ச் 24ஆம் திகதியன்று அறிவிக்கப்பட்டவாறு சௌபாக்கியா கொவிட்-19 மறுமலர்ச்சிக் கடன் வசதி என்ற பெயரில் சௌபாக்கியா (சுபீட்சம்) கடன் திட்டத்தின் கீழ் புதிய மீள்நிதியிடல் கடன் வசதியொன்றினைத் தொடங்கியுள்ளது.
மத்திய வங்கியானது இத்திட்டத்தின் கட்டம் 1 இன் கீழ் 13,861 கடன் விண்ணப்பங்களுக்கென 27.9 பில்லியன் ரூபா தொகைக்கு ஒப்புதலளித்துள்ளது. இதில் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் 2020 யூன் 24 வரை நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட 7,274 வியாபாரங்கள் மத்தியில் 14.8 பில்லியன் ரூபாவினை ஏற்கனவே பகிர்ந்தளித்துள்ளன. இக்கடன்கள் 6 மாத சலுகைக் காலத்துடனும் 24 மாதங்களைக் கொண்ட மீள்கொடுப்பனவு காலத்துடனும் கூடிய 4 சதவீத (ஆண்டுக்கு) சலுகை வட்டி வீதத்தினைக் கொண்டவையாகும்.
மேலும், திட்டத்தின் கட்டம் 2 இன் கீழ் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கு 4 சதவீத (ஆண்டுக்கு) சலுகை வீதத்தில் மீள் கடன் வழங்குவதற்கும் வர்த்தக வங்கிகளுக்கு 1 சதவீத (ஆண்டுக்கு) சலுகை வீதத்தில் மேலும் 120 பில்லியன் ரூபாவினை வழங்குவதற்கும் தற்போது மத்திய வங்கி ஆயத்தமாகவுள்ளது.