பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்விற்கு தான் ஒருபோதும் தடையாக இருந்ததில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று கொத்மலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் பெருந்தோட்ட மக்களின் சம்பள விடயமானது கூட்டு ஒப்பந்தத்துடன் சம்பந்தப்பட்டுள்ள ஒன்றாகும்.எனவே இவ்விடயம் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் பெருந்தோட்டத்துறை அமைச்சுக்கு கிடையாது எனவும் இதன் காரணமாகவே கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாகவே இதற்கான பணிகள் இடம்பெறவேண்டும் என தான் கூறியதாகவும், மாறாக தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைப்பதற்கு தான் தடையாக இருக்கவில்லை எனவும் ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைத்தால் தானும் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைமைப்பதவி கடந்தவாரம் நவீன் திஸாநாயக்க அவர்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது . இந் நிலையில் இனிவரும் காலங்களில் ஒரு தொழிற்சங்க தலைவராக தான் போராட உள்ளதாகவும் மேலும் தொழிலாளர்களுக்காக பேசவேண்டிய பொறுப்பும் தனக்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது இணைந்து பயணிப்போம் என்று சஜித் தரப்புக்கு கூறப்பட்டிருந்தாலும் அவர்கள் தனித்து சென்றுவிட்டதாகவும் மற்றும் ஐக்கிய தேசியக்கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை என கூறிவிடவும் முடியாது ஏனெனில் 2015 இல் நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் சஜித்தே பிரதித் தலைவர் பதவிக்கு தெரிவானார் என்றும் அவர் பொறுமையாக இருந்திருந்தால் தலைமைப்பதவி கிடைத்திருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எது எப்படியோ எமக்கு அரசாங்கத்துடன் டீல் கிடையாது என்றும், எங்களில் இருந்து பிரிந்துசென்றவர்களையும் இணைத்துக்கொண்டு ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியமைக்க நடவடிக்கை எடுப்போம் என்றும் மேலும் தொலைபேசிக்கு வாக்களித்து பயனில்லை யானைக்கு வாக்களிக்கவும் ஐக்கிய தேசியக்கட்சி நிச்சயம் மீண்டெழும் என்றும் கூறியுள்ளார்.